வீடு கட்ட போறீங்களா.. திருச்சியில் நடந்த சம்பவம் தெரியுமா.. 27 லட்சம் வாங்க போகும் உரிமையாளர்
திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன் என்பவர் தனக்கு வீடு கட்டிக் கொடுக்க தாமதம் செய்த நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், வீடு கட்டி கொடுக்க தாமதப்படுத்தியதுடன், தரமான வீடு கட்டி கொடுக்காத கட்டுமான நிறுவனம் ரூ.27.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனக்குச் சொந்தமான கே. சாத்தனூரில் உள்ள 2,400 சதுர அடி நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என்று திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகியிருக்கிறார். வீடு கட்டுவதற்காக ரூ.17.40 லட்சத்தை பல்வேறு தவணைகளாக வழங்கி உள்ளார்.

ஆனால் கட்டுமான நிறுவனத்தினர் பணியைத் தொடங்கிய நிலையில், தரமின்றி பணிகளை செய்தும், முழுமையாக முடிக்காமலும் காலதாமதம் செய்தனர். இது தொடர்பாக, திருச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தனசேகரன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர், உறுப்பினர் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், கட்டி முடிக்காத வீடு கட்டுமான பணிக்காக, கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு ரூ.17 லட்சத்து 40 ஆயிரமும், முறையற்ற வணிகம் மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.10 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரமும் 45 நாட்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பார்க்கிங் வழக்கு
அதேபோல் இதே திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் பார்க்கிங் கட்டித்தராத கட்டுமான நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு பற்றியும் பார்ப்போம். திருச்சி கரூர் புறவழிச்சாலையைச் சேர்ந்தவர் பாமினி சோமசுந்தரம் என்பவர் கரூர் புறவழிச்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் ஒரு வீட்டை கார் நிறுத்துமிடத்துடன் 22-08-2008 அன்று விலைக்கு வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் விற்பனை பத்திரத்தின் படி கார் நிறுத்துமிடம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
கூடுதல் பணத்தை கொடுத்தால் தருவதாகக் கூறியதன் அடிப்படையில், பாமினி சோமசுந்தரம் கார் நிறுத்துமிடத்துக்காக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கூடுதலாக தந்துள்ளார். இதையடுத்து கட்டுமான நிறுவனமும், இடஉரிமையாளர்களும், தனியாக பாதுகாப்பில்லாத கார் நிறுத்துமிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவு படி, அந்த குடியிருப்பில் உரிமமற்ற கட்டுமானங்களை (பாமினி சோமசுந்தரத்துக்கு வழங்கப்பட்ட கார் நிறுத்துமிடம் உள்பட) மாநகராட்சி அகற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட பாமினி சோமசுந்தரம், உரிய இழப்பீடு கேட்டு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 29-4-2021 அன்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கை ஆணைய தலைவர் சேகர், உறுப்பினர் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில் முறையற்ற வணிக செயலுக்காக எதிர்தரப்பினர் கூட்டாகவோ, தனித்தனியாகவோ பாமினி சோமசுந்தரத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை மனை வாங்கிய 2008-ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.25 ஆயிரமும், உரிய கார் நிறுத்துமிடத்தை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக அவருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் பார்க்கிங் வசதியும் கிடைக்க போகிறது.












Click it and Unblock the Notifications