ஜல்லிக்கட்டு போட்டிகளின் செலவுகளை... நானே ஏற்பேன்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி வாக்குறுதி
திருச்சி: திமுக ஆட்சி அமைந்தவுடன் திருவெறும்பூரில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளின் செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் திமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சட்டசபை உறுப்பினராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அவர் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து தீவிரமாக பிராசாரம் செய்து வருகிறார்.
அவர் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசுகையில், "தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான செலவுகளை நானே ஏற்றுக் கொள்வேன்" என்று வாக்குறுதி அளித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் செய்து தருவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்துவேன் என்றும் கூறி, அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.