சூர்யாவின் சிங்கம் படத்தின் போலீஸ் ஸ்டேசன் கட்டிடத்தில் படுகொலை:தூத்துக்குடியில் ஷாக்-திணறும் போலீஸ்
தூத்துக்குடி: நடிகர் சூர்யா நடித்து பிரம்மாண்ட வெற்றியை பெற்ற சிங்கம்-1 படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேசன் கட்டிடத்தில் நிகழ்ந்த பயங்கர படுகொலை சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கு அமைந்துள்ள ஜார்ஜ் ரோட்டில் தமிழ்நாடு மாநில பனை மற்றும் நார்ச்சத்து மார்க்கெட்டிங் கூட்டமைப்புக்கான ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. 1966-ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் காவல் நிலையமாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா, நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பில் பல நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.

பொதுமக்கள் பதற்றம்
அதன் பின்னர் பாழடைந்த நிலையில் இந்த கட்டிடம் காட்சி அளிக்கிறது. அந்த பகுதிக்குள் அந்நியர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் இந்த நிலையில் இன்று காலை அந்த கட்டிடத்துக்கு மேலே ஏராளமான காக்கைகள் கூட்டமாக கூடியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தென்பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பயங்கர கொலை
தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தை ஆய்வு செய்தனர். ஒன்றுமில்லாத நிலையில் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கு முதல் இரண்டு அறைகளுக்கு அடுத்ததாக உள்ள திறந்த வெளியில் ஒரு நபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரடியாக வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

போலீஸ் விசாரணை
ஒரு நாள் முன்பே கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற நிலையில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் பற்றிய விபரங்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சவாலான கொலை
மிகவும் மோசமான நிலையில் உள்ள அந்தக் கட்டிடத்திற்கு அந்நியர்கள் யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் இங்கு வந்தது யார் கொலையானவர், கொலையாளி யார் என்ற விவரங்கள் சேகரிப்பதில் காவல்துறைக்கு மிகுந்த சவாலாக உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications