''முதல்ல அழகிரியை கவனியுங்க... சசிகலா பற்றி அப்புறம் பேசலாம்''... மு.க.ஸ்டாலினை சாடிய இல.கணேசன்!
தூத்துக்குடி: சசிகலா வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
'சசிகலா வந்துவிட்டார் இனிமேல் நடக்க வேண்டியது நடக்கும்'' என்று கூறுவது ஒரு பக்குவம் உள்ள அரசியல் தலைவருக்கு பொருந்தாது என்று மு.க.ஸ்டாலினையும் இல.கணேசன் தாக்கினர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- சசிகலா தற்போதுதான் சிறையில் இருந்து வந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று சிலர் கேட்கின்றனர். இது அதிமுக மட்டுமே கவலைப்பட வேண்டிய விஷயம்.
ஒரு கட்சி தன்னுடைய ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டலாம். அது தான் நடந்துள்ளது. அதனாலே ஒட்டுமொத்த தமிழகமும் சசிகலாவை வரவேற்கிறது என்று குறிப்பிட முடியாது. நான் குறைவாகவும் சொல்லவில்லை. விமர்சனமும் செய்யவில்லை. சசிகலா வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
அழகிரி திமுகவிற்கு எதிராக போட்டி போட்டு செயல்படுகிறார். என்வே அதை பற்றிதான் ஸ்டாலின் கவலைப்பட வேண்டுமே தவிர ''சசிகலா வந்துவிட்டார் இனிமேல் நடக்க வேண்டியது நடக்கும்'' என்று கூறுவது ஒரு பக்குவம் உள்ள அரசியல் தலைவருக்கு பொருந்தாது என்று இல.கணேசன் தெரிவித்தார்.