சாத்தான்குளத்தில் விசாரணையை ஆரம்பித்தது சிபிசிஐடி.. ஜெயராஜ் குடும்பத்திற்கு ஏடிஜிபி நேரில் ஆறுதல்
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்குதலால் தந்தை மற்றும் மகன் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணையை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி சம்பவம் நடைபெற்ற காவல் நிலையத்தில் ஆய்வு செய்தது.
சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக கடையை திறந்து வைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு இரவு முழுக்க லாக்கப்பில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
ஆசனவாய்ப் பகுதியில் லக்கி சொருகப்பட்டு, ரத்தம் சொட்ட சொட்ட ஏழு முறை லுங்கி மாற்றும் அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

உலுக்கிய மரணங்கள்
இந்த நிலையில் கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு கூறிய நிலையில், சிபிஐ இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

விசாரணை ஆரம்பம்
இதையடுத்து, இன்று உடனடியாக சிபிசிஐடி விசாரணையை ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து தடயங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்தனர். அன்றைய தினம் பணியில் இருந்த போலீசார் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

ஏடிஜிபி விசிட்
இதையடுத்து சாத்தான்குளம் பஜார் பகுதியில் அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர். இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயந்த் முரளி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவத்தன்று நடந்தவற்றை அவர்களிடம் கேட்டறிந்தார்.

நியாயம்
ஜெயராஜ் மனைவி மற்றும் மகள்கள் நடந்த சம்பவங்களை கண்ணீருடன் விளக்கி கூறினர். இதையடுத்து உங்களுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய ஆறுதல் அளித்த ஜெயந்த் முரளி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications