வாட்ஸ் அப் குழு மோதல்! கிறிஸ்துவ பாஸ்டர் மோகன் சி.லாசரஸ் சகலைக்கு சிக்கல்! இந்து மக்கள் கட்சி புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ மதபோதகர்கள் இருவர் நடத்தும் வாட்ஸ் அப் குழுக்களில் வெடித்த மோதலால் 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி லாசரஸின் சகலையும், ஆயருமான காட்பரே நோபுளை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.

மோகன் சி.லாசரஸ் சகலை: நெல்லை மாவட்டம் இட்டேரி கிராமத்தில் கிறிஸ்துவ சபையை அமைத்து அதன் பிஷப் ஆக இருந்து வருபவர் காட்பரே நோபுள். இவர் பிரபல கிறிஸ்துவ மதபோதகரான மோகன் சி லாசரஸின் சகலை ஆவார். இவருக்கும் தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் கிப்ட்சனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். வாட்ஸ் அப் குழுவில் இரு தரப்பும் மாறி மாறி கருத்துயுத்தம் நடத்தி வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.
11ஆம் வகுப்பு மாணவன்: இந்நிலையில் மோகன் சி லாசரஸின் சகலை காட்பரே நோபுள் தனது வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்த 11ஆம் வகுப்பு மாணவனை நாசரேத் கோவில்மணி என்ற பெயரில் தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் கிப்ட்சன் உறுப்பினராக உள்ள வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளார். பிறகு புதிதாக சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவனின் எண்ணிலிருந்து கிப்ட்சன் இறந்துவிட்டார் என்றும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி எனவும் போஸ்ட் போடப்பட்டிருக்கிறது.
வாட்ஸ் அப் குழு சண்டை: இதையடுத்து தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் கிப்ட்சன் அளித்த புகாரின் பேரில் மோகன் சி லாசரஸ் சகலை வீட்டில் வேலை செய்த அந்த சிறுவனை தூத்துக்குடி போலீஸார் நெல்லை மாவட்டம் இட்டேரிக்கு சென்று கைது செய்து சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டிருப்பது இந்து மதத்தை சேர்ந்த சிறுவன் என்பதால் இந்த விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்துள்ளது. போலீஸார் கைது செய்ய வேண்டும் என்றால் மோகன் சி லாசரஸின் சகலை காட்பரே நோபுளைத் தான் கைது செய்ய வேண்டுமே தவிர சிறுவனை கைது செய்தது ஏன் என போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சி: இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில், நோபுள் காட்பரேவுக்கும், கிப்ட்சனுக்கும் நடந்த வாட்ஸ் அப் குழு மோதலில் அப்பாவிச் சிறுவன் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சகிப்புத்தன்மை பற்றியும், அன்பு, கருணை பற்றியும் இயேசுபிரான் போதித்த நல்வழிகளை எடுத்துரைக்க வேண்டிய போதகர்களே இப்படி வாட்ஸ் அப் குழு மோதலில் ஈடுபட்டு வருவது சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications