நாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர்... இனி மாவட்டம் தோறும் அரசு நிகழ்ச்சிகள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி செல்கிறார்.
முதலமைச்சரின் தூத்துக்குடி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். நாளை காலை 11 மணியளவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை பிரிவை தொடங்கி வைக்கவுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். இதையடுத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே அந்த சம்பவத்துக்கு பிறகு ஓரிரு முறை முதல்வர் தூத்துக்குடி சென்றிருந்தாலும் கூட, விமான நிலையத்தில் இருந்து நாங்குநேரி பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தான் சென்றிருக்கிறார்.
இதனிடையே நாளை தூத்துக்குடி செல்லும் முதல்வர் திருச்செந்தூர் கோவிலுக்கும் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அடுத்தபடியாக சமீபகாலமாக வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதை குறைத்திருந்த முதல்வர், இனி வரும் நாட்களில் மாவட்டம் தோறும் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது போலவும் இருக்கும், மக்களை சந்தித்தது போலவும் இருக்கும் என்பதால் இனி முதல்வரை அடிக்கடி சுற்றுப்பயணத்தில் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications