எப்படி இருக்கீங்க! காய்கறி வியாபாரம் எப்படியிருக்கு? தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு முதல்வர் விசிட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காய்கறி சந்தையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் திமுக வேட்பாளராக கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். கடந்த சில தினங்களாக மத்திய அரசை கண்டித்து கனிமொழி தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தனது பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி, மிக்ஜாம் புயல் ,வெள்ள பாதிப்பை பார்க்க ஏன் வரவில்லை, ஒரு பைசாவும் நிதியாக ஏன் தரவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசை கண்டித்தே அவர் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தஞ்சை, நாகையில் முதல்வர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவரும் தனது பிரச்சாரத்தில் மத்திய அரசையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழியையும் ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனியையும் ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். தூத்துக்குடியில் தங்கியிருக்கும் ஸ்டாலின், இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த காய்கறி மார்க்கெட்டிற்குள் நுழைந்தார்.

அங்கு இருந்த வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் நலம் விசாரித்துவிட்டு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என கேட்டறிந்தார். பிறகு வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு என கேட்டதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தஞ்சை சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த டீக்கடைக்கு சென்று டீக்குடித்தபடியே பிரச்சாரம் செய்தார். அப்போது டீக்கடைக்காரரிடம் டீ நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த பகுதி மாவட்டச் செயலாளர் டீயை நன்றாக ஆத்தி ஆத்தி முதல்வருக்கு கொடுத்தார்.
முதல்வர் எங்கு சென்றாலும் அவர் உடற்பயிற்சியையும் நடைப்பயிற்சியையும் விடுவதில்லை. அது போல் தேர்தல் பிரச்சாரத்திற்கு பல ஊர்களுக்கு செல்லும் முதல்வர் அங்கு நடைபயிற்சி செய்துவிட்டு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுவார்.












Click it and Unblock the Notifications