வடக்கே மோடி பேசிய பேச்சுக்கு கோவில்பட்டி கொதிக்குது.. பிரதமருக்கு எதிராக போலீசில் பரபர புகார்!
தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக இன்று கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் கடந்த 21ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "மக்களிடம் உள்ள சொத்துகள் கணக்கெடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும், மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசிய பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அந்த புகாரில் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துகள் நாடு முழுவதும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications