திருச்செந்தூர் முருகனை காண வரிசையில் காத்திருந்த பக்தருக்கு ஏற்பட்ட சோகம்.. மூச்சுத்திணறி பலி!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசிப்பது வழக்கம். முக்கியமான விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
ஓம்குமார், திருச்செந்தூர் கோவிலில் உள்ள 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்துள்ளார். கடும் கூட்ட நெரிசல் காரணமாக காத்திருக்க வேண்டி இருந்துள்ளது. அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஓம்குமாருக்கு ஏற்கனவே சுவாச கோளாறு இருந்து வந்துள்ளது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இறந்த ஓம்குமாரின் உடன் வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது. கடந்த ஆண்டும் திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சிலர் இதேபோல மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சமயங்களில் பக்தர்களுக்கு நீராகாரம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications