திருச்செந்தூர் கோவிலில் கரண்ட் ஷாக்.. பக்தர் மரணம்.. அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். கோயில் அருகே புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர் பிரசாத் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜோதிபாசு தனது உறவினர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுருக்கு சாமி கும்பிட நேற்று சென்றிருந்தார். கடலில் நீராடி விட்டு ஜோதிபாசு தனது மகன் பிரசாத் உடன் கோவிலுக்கு எதிரில் இருந்த புறகாவல் நிலையம் அருகே அமர்ந்திருந்தார்.

புறகாவல் நிலையத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எர்த் வயரில் மின் கசிவு ஏற்பட்டு அது அங்கு அமர்ந்திருந்த பிரசாத் மீது தாக்கியது. இதில் அலறி துடித்தார் பிரசாத். மகனை காப்பாற்ற சென்ற ஜோதிபாசு மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அங்கிருந்த பக்தர்கள் மின்சாரத்தை துண்டித்து பிரசாத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக ஜோதிபாசு குற்றம் சாட்டியுள்ளார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர் பிரசாத் உயிரிழந்தது குறித்து மின்சார வரிய அதிகாரிகளிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கோட்டாட்சியருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications