மக்கள் பிரச்னை இருக்கு.. ஆனால் சரி செய்ய முடியல! விரக்தியில் புலம்பும் திமுக கவுன்சிலர்! பரபர ஆடியோ
தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சியில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ இணையத்தில் வைலராகி உள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதேநேரம் மற்ற எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாகப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மிகக் குறைவான இடங்களிலேயே வெல்ல முடிந்தது.

பரபர ஆடியோ
உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பின்னர், வார்டுகளுக்கு தேவையான பணிகளை கவுன்சிலர்களே கவனித்து வருகின்றனர். அவ்வப்போது கவுன்சிலர்களின் அடாவடி நடவடிக்கை குறித்து செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துவதில் இருந்தும் தவறவில்லை. ஆனால், இந்த முறை கவுன்சிலர் ஒருவர் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முடிவதில்லை என்று புலம்பும் ஆடியோ வெளியாகி உள்ளது.

திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. அதில் பெரும்பாலான வார்டுகளில் திமுகவினரே கவுன்சிலர்களாக உள்ளனர். கோடை காலம் முடிந்துவிட்ட போதிலும், திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே மோசமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவூபதாக புகார்கள் உள்ளன. கடந்த 10 நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு அங்கு மோசமாக உள்ளது.

தண்ணீர் பிர்சினை
நிலைமையைக் கட்டுப்படுத்த அங்குள்ள கவுன்சிலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், அதில் எதுவும் பெரியளவில் பலன் தருவதாக இல்லை. இதனிடையே குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

புலம்பல்
அந்த ஆடியோவில் திருச்செந்தூர் நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது எனக் குறிப்பிடும் கவுன்சிலர் ரூபன், இது நிர்வாக சீர்கேடா அல்லது கடவுளின் சோதனையா அல்லது திமுக கவுன்சிலர்களான நாங்கள் வந்த தரித்திரமா எனத் தெரியவில்லை என விரக்தியில் பேசுகிறார். ஏற்கனவே பொதுமக்களும் அனைவரும் குடிதண்ணீர் கிடைக்கவில்லை எனத் திட்ட ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், இருப்பினும் தங்களால் குடிதண்ணீர் கொடுக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.

குற்றச்சாட்டு
திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், புது கட்டிட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இதை நிலை தொடர்ந்தால் நாம் அனைவரையும் பொதுமக்கள் ஒரு நாள் அடித்து விரட்டும் நிலைமை வரும் என்றும் விரக்தியுடன் பேசுகிறார். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications