உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த துர்கா - வெற்றிக்கு வழிபாடு
மு.க ஸ்டாலின் மனைவி துர்கா திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து திமுக வெற்றிக்காக வழிபாடு நடத்தினார்.
தூத்துக்குடி: சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டு மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். தூத்துக்குடி மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் அவரது மனைவி துர்கா.
Recommended Video
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக, திமுக கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் ஒருபக்கம் நடைபெற்றாலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தலைவர்கள் படு பிஸியாக இருக்கின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி வருகிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அனைத்து குறைகளையும் தீர்ப்போம் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் அவருடைய மனைவி கோவில்களில் சென்று சாமி தரிசனம் செய்து கணவரின் வெற்றிக்காக வழிபட்டு வருகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட 2 பெண்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காரில் வந்தார். அவர்களை வரவேற்ற பட்டர்கள் கோவிலுக்குள் வி.ஐ.பி.கள் செல்லும் வழியில் அழைத்து சென்றனர்.
மூலவர் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மூலவரை கண்களை மூடி நின்று பயபக்தியுடன் துர்கா ஸ்டாலின் வணங்கினார். விபூதியை துர்கா ஸ்டாலின் நெற்றியில் பூசிக் கொண்டார். அவருக்கும் உடன் வந்திருந்தவர்களுக்கும் பட்டர்கள் பிரசாதம் வழங்கினர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தினார். கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு வெளியே வந்த அவர் நுழைவு வாயிலில் இருந்து பேட்டரி காரில் ஏறி வெளியே சென்றார். கார் நிறுத்தும் இடத்திற்கு சென்ற துர்கா தான் வந்த காரில் ஏறி தூத்துக்குடிக்கு கிளம்பினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் செல்லும் போதெல்லாம் உடன் செல்லும் துர்கா, அந்தந்த ஊர்களில் உள்ள மிக பிரபலமான ஆலயங்களில் வழிபாடு நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.