அசத்திட்டாங்களே கனிமொழி.. கையில் குழந்தை, முகத்தில் பூரிப்புமாய் நின்ற தம்பதி.. தூத்துக்குடி ஹேப்பி
தூத்துக்குடி: திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழிக்கு, தூத்துக்குடி தம்பதியினர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.. என்ன நடந்தது தூத்துக்குடியில்?
தன்னுடைய சொந்த தூத்துக்குடிக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருபவர் திமுக எம்பி கனிமொழி.. ஸ்ரீவெங்கடேசுவரபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட இப்போதுவரை அவரது பணிகள் விரிவடைந்து செல்கின்றன..

கனிமொழி: தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை, உரிய நேரத்தில் நிறைவேற்றி தந்துவிடுவதில் முதன்மையானவராக விளங்கி கொண்டிருக்கிறார்.. பொள்ளாச்சி மற்றும் சாத்தான்குளம் விஷயங்களை கையில் எடுத்து போராடியவர்களிலும் முதன்மையானவராகவும் கனிமொழி திகழ்ந்திருக்கிறார்..
இதுபோக மழை வெள்ள பாதிப்புகளின்போது. நேரடியாகவே களத்துக்கு சென்று செய்திருந்த நிவாரண பணிகளும் அம்மக்களை கவனிக்க செய்திருந்தது.. இதற்கான பலனையே, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் வெற்றியாக திருப்பி தந்தார்கள் தூத்தூக்குடி தொகுதி மக்கள்.
வேட்பாளர்கள்: தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட்டை காலி செய்த வேட்பாளர் என்ற தனிச்சிறப்பை கனிமொழி பெற்றார்.. வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் ஆளாய் வெற்றி பெற்றவரும் கனிமொழிதான்.. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரும் கனிமொழிதான்.
இந்நிலையில், தம்பதி ஒருவருக்கு கனிமொழி செய்திருக்கும் உதவிதான், அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி வேல்மயில் - பேபி.. இருவருமே மாற்றுத்திறனாளிகள்.
உணவு மையம்: இவர்களுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது.. வேல்மயில், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறார்.. பேபி, ஒரு தனியார் மதிய உணவு மையத்தில் அமைப்பாளராக உள்ளார். வேல்மயிலின் பெற்றோருடன் இவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியினர், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி மையத்தில் கடந்த 2020-ல் குழந்தையைத் தத்தெடுக்கப் பதிவு செய்திருந்தனர். அத்துடன், இதற்கான சட்டரீதியான வழிமுறைகளையும் செய்தனர்.
நேரடி ஆய்வு: குறிப்பாக, குழந்தை வளர்ப்புக்கான சூழல் தம்பதி வீட்டில் இருக்கிறதா என்று ஒரு சமூகப்பணியாளர், அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று நேரடி ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில், "குழந்தையை வளர்ப்பதற்குத் தகுதி உடையவர்கள்" என சான்றிதழ் அளித்தனர். எதிர்பார்ப்பு பட்டியலில், 3 வருடம் முடிந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் தங்கள் விண்ணப்பத்தை தம்பதியினர் புதுப்பித்தனர்... மேலும், மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் உட்பட அனைத்து அசல் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.
பிறகு, "குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை 48 மணிநேரத்தில் உறுதிப்படுத்துங்கள்" என்று CARA-விலிருந்து கேட்கப்பட்டதற்கும் தம்பதியினர் "ஆம்" என்று உறுதிப்படுத்தினார்கள்.
எலும்பு சிகிச்சை நிபுணர்: பின்னர், அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு சுகாதார சான்றிதழ் அளிக்குமாறு தத்தெடுப்பு குழுவிடம் கேட்கப்பட்டதையடுத்து, "இத்தம்பதி குழந்தையை தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள்" என்ற சான்றிதழை தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணரிடமிருந்து பெற்று தந்தார்கள். பிறகு, மருத்துவ குழுவின் தலைவரின் இறுதி பரிந்துரையில், 2 பேருமே மாற்றுத்திறனாளிகள் என்றாலும், தத்தெடுத்த பிறகு குழந்தையைப் பராமரிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து தம்பதி இருவரும், திண்டுக்கல் காந்தி கிராமத்திலுள்ள ஒரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில், ஒரு குழந்தையை தத்தெடுக்க சென்றார்கள். ஆனால், திடீரென இவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. "குழந்தையின் முதல் இரண்டு ஆண்டுகளில், மாற்றுத்திறன் தம்பதியால் அதை பராமரிக்க முடியாது" எலும்பு சிகிச்சை நிபுணரின் கருத்தை மட்டுமே கருத்தில்கொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
தத்தெடுப்பு: 4 ஆண்டுகளாக குழந்தையை தத்தெடுக்க முயன்றும், அதற்காகவே இத்தனை நடைமுறைகளையும் கடந்து வந்தும், இப்படியாகிவிட்டதே என்று தம்பதியினர் மனம் உடைந்து போனார்கள்.
இதற்கு பிறகுதான் இந்த விஷயம் திமுக எம்பி கனிமொழியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மாற்றுத்திறனாளி தம்பதியை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசினார் கனிமொழி.. "கவலைப்படாதீங்க, உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று அவர்களுக்கு நம்பிக்கையும், உறுதியும் தந்தார் கனிமொழி.
சான்றிதழ்: இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், தம்பதியை மறுபரிசோதனை செய்த மருத்துவர்கள்.. "குழந்தையை வளர்ப்பதற்கு இவர்கள் 100% தகுதி உடையவர்கள்" என்று சான்றிதழ் வழங்கினார்கள்.. இதையடுத்தே தத்தெடுக்க ஆசைப்பட்ட பெண் குழந்தை, தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை பெற்றுக் கொண்டதுமே மலர்ந்த முகத்துடன், எம்.பி கனிமொழியை தூத்துக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று தம்பதி இருவரும் சந்தித்தார்கள்.. பெண் குழந்தையை தத்தெடுக்க உதவியதற்காக மனமார்ந்த நன்றியை சொன்னார்கள்.குழந்தையை பார்த்ததுமே வாரி அணைத்து கொண்டார் கனிமொழி.. குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமழை பொழிந்தார்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது..
"எங்கள் ஆசை நிறைவேறிவிட்டது.. குழந்தையை நாங்கள் பெற்றெடுத்த குழந்தையாக நினைத்து நல்ல படியாக வளர்த்துப் படிக்க வைப்போம்" என்றும் பூரித்து சொல்கிறார்கள். வேல்மயில் - பேபி தம்பதியினர்!












Click it and Unblock the Notifications