ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் … தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகள் போராட்டம்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் குழந்தைகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் என்பது அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கையாகும். அதனை முன் வைத்து, அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்ற போது நிகழ்ந்த வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர, ஆலையை திறக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் உத்தரவு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஆலையை திறக்க வேண்டாம் என்று தூத்துக்குடி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் 100க்கும் அதிகமான குழந்தைகள் ஒன்றாக பேரணி சென்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அவர்கள், பேரணியாக சென்று போராட்டத்தில் இறங்கினர். குழந்தைகளின் இந்த போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications