அட.. காக்காவ விரட்டுங்கப்பா! பிரஸ் மீட்டின்போது திடீர் ஷாக்.. சிரித்தபடி சமாளித்த எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடி: இன்று திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பிரஸ் மீட்டின் போது அவரது சட்டையில் காகம் எச்சமிட்டதையடுத்து, சிரித்துக்கொண்டே, "அந்த காக்காவை விரட்டுங்கப்பா" எனச் சொல்லி கலகலப்பாக்கினார் எடப்பாடி பழனிசாமி.
இன்று திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமி கோவிலில் வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றார். இன்று காலை 7.30 மணி அளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார். அரசியல் எதிரிகள் தொல்லை ஒழிய இன்றைய தினம் சஷ்டி திதியன்று எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய திமுக அரசின் வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.
திமுக அமைச்சர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன் மீதே ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்." எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது அப்பகுதியில் மேலே பறந்த காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சத்தம் போட்டு காகத்தை விரட்ட முயன்றனர். திடீரென காகம் எடப்பாடி பழனிசாமி சட்டையில் எச்சமிட்டது. அருகில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதனைத் தட்டிவிட்டார். "அட அந்த காக்காவ விரட்டுங்கப்பா" என சிரித்தபடி கூறி, நிலைமையை சகஜமாக்கினார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications