தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க 12 மணி நேரமாக போராட்டம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கேபிள் கேலரி பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 12 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஒன்று மற்றும் இரண்டாவது யூனிட்டில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த அறையில் இருந்த மின்சார ஒயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை பரவ விடாமல் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனல் மின் நிலையத்தில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. அனல் மின் நிலைய பகுதியில் பிடித்த தீயை அணைக்க இன்னும் பல மணி நேரம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications