ஆதிச்சநல்லூரில் தீ விபத்து.. கருகிய பனைமரங்கள்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் விழா மேடை வரை பரவியது
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 300க்கும் மேற்பட்ட பனைமரங்கள், தென்னை மரங்கள், வாழை மரங்களும் எரிந்து சாம்பலானது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ள விழா மேடை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டில் அகழாய்வு பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆக.5-ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளதாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீ வைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற 'பி' மற்றும் 'சி' சைட் பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளையும் மத்திய அமைச்சர் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவிற்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன பங்கேற்றும் விழா என்பதால் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு விழா மேடை அருகே திடீரென தீ பற்றி பரவியது. காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த பனைமரங்களுக்கும் தீ பரவியது.
30க்கும் மேற்பட்ட பனை மரங்களில் நெருப்பு பற்றியதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அருகில் இருந்த வாழை தோட்டத்திற்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பனை மரங்களும், தென்னை மரங்களும் கருகி சாம்பலானது. தீ விபத்து குறித்து ஊர் மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தீ பயங்கரமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர்.
அருகில் இருந்த உணவகம், வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து கூடுதலாக பாளையங்கோட்டை, திருச்செந்தூரில் இருந்தும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து காரணமாக கருங்குளத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதனையடுத்து திருச்செந்தூர் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பீய்ச்சி அடித்தனர். இதனையடுத்தே தீ அணைந்தது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் பங்கேற்கும் விழாவை தடுக்க சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications