தூத்துக்குடி: விவசாய வேலைக்கு போன போது வேன் கவிழ்ந்து விபத்து.. ஐவர் பலி - முதல்வர் நிவாரணம்
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சிறிய ரக சரக்கு வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திருமணக் கொழுந்துபுரம் கிராமத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சவரிமங்கலம் பகுதிக்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 35 பேர் பயணித்தனர். திருக்கொழுந்துபுரம் சித்திரை, என்பவர் வேனை ஓட்டினார்.
மணியாச்சி அருகே வேன் சென்ற போது திடீரென்று தடுமாறியது அதீத வேகம் மற்றும் பளு காரணமாக பாலத்தில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறி அருகிலிருந்த கண்மாயில் கவிழ்ந்தது.
இதில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திருமண கொழுந்துபுரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள், செல்லத்தாய், மாரியம்மாள், லிங்கம்மாள், பேச்சியம்மாள் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.