நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதி திருச்சி சிவாவுக்கும் ஏற்படுமா? கேள்வி எழுப்பும் எச் ராஜா
தூத்துக்குடி: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதிதான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்பது போன்ற பல கேள்விகள் திமுகவின் வன்முறையை பார்த்ததால் எழுந்து கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஒரு விளையாட்டு திடல் திறப்பு விழாவுக்கு அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்பியை அழைக்கவில்லை என்றும் அவரது பெயரை கல்வெட்டில் பொறிக்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதனால் ஏற்பட்ட வாய்த் தகராறை அடுத்து அமைச்சர் நேருவின் காரை திருச்சி சிவா ஆதரவாளர்கள் வழிமறித்து கருப்பு கொடி காட்டினர். இதனால் கொந்தளித்த அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் விழா நடந்த அதே பகுதியில் உள்ள திருச்சி சிவாவின் வீட்டிற்கு சென்றனர்.

கார் கண்ணாடி
அங்கு அவரது கார் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். மேலும் அவரது வீட்டு வராண்டாவில் இருந்த பொருட்களை எல்லாம் துவம்சம் செய்தனர். இது குறித்து திருச்சி சிவா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அது போல் அமைச்சர் நேருவை வழி மறித்ததாக அவர் தரப்பிலிருந்தும் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் அடிதடி
இதையடுத்து இரு தரப்பினரும் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்திற்குள்ளும் அடித்துக் கொண்டனர். இதில் நாற்காலிகளை வீசியதால் பெண் போலீஸ் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒரே கட்சியினரே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்களுக்கு அவல் போல் இருந்தது. இதையடுத்து திருச்சி சிவா வீட்டை தாக்கியவர்களை திமுக கட்சியிலிருந்து நீக்கியது.

திருச்சி சிவா
பின்னர் வெளிநாடு சென்றிருந்த திருச்சி சிவா இந்த சம்பவத்தை நினைத்து வேதனை அடைந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு சமாதானம் பேசினார். இந்த நிலையில் இந்த சம்பவத்தை வைத்து பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பாஜக சாதனை விளக்க கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக சார்பில் 9ஆம் ஆண்டு சாதனை விளக்க மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா பேசுகையில் திமுக என்றாலே வன்முறை கட்சி என அனைவருக்கும் தெரியும். அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகிறார்கள்.

நேருவின் தம்பிக்கு நடந்தது என்ன
திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் திருச்சி சிவாவுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் ஒரு பாஜககாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தெரியவில்லை. ஸ்டாலினுக்கு நிர்வாகம், கட்சி, குடும்பம் என எதன் மீதும் கட்டுப்பாடு இல்லை.

பரிதாபம்
இந்த மாதிரியான பரிதாபகரமான நிலையாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை, கடந்த பட்ஜெட்டில் 2,718 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றனர். அதுகுறித்து எந்த தகவலும் இல்லை. அதற்குள் இந்த பட்ஜெட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ 7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் கொடுக்கலாம். இதுவரை என்ன தகுதி என அறிவிக்கப்படவில்லை. அப்படிஎன்றால் ஒரு வேளை திமுககாரர்களுக்கு மட்டும் ரூ 1000 கொடுக்க போகிறார்களோ என்னவோ? என எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை வாக்கிங் சென்ற போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கை, கால் கட்டிய நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கோரமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் யார் கொலையாளி என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications