முதலில் தளபதி.. பிறகு ஜோசப் விஜய்.. அழுத்தம் திருத்தமாக சொன்ன அர்ஜுன் சம்பத்.. ஏன் என்னாச்சு?
தூத்துக்குடி: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என சொன்ன இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அவருடைய பெயரை ஜோசப் விஜய் என அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் தல அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், அவர் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அராஜகத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன். தளபதி விஜய், ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

லஞ்ச ஊழல் ஒழிப்புக்கும் சாராய ஒழிப்புக்கு எதிராகவும் அரசியலுக்கு வர வேண்டும். பிரதமர் மோடி, அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும். நம்ம சாமியார் ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் ஏடிஎம்மில் சாராயம் கிடைக்கிறது.
இந்தியாவில் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று உழைக்கும் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும். ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகள் தனியாக தேசிய தொழிலாளர்கள் தினத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் இந்திய கம்யூனிஸ்டுகளும் மனம் திருந்த வேண்டும்.
கோயில் திருப்பணிகள் ரூ 300 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இது நிறைவு பெற 3 ஆண்டுகள் ஆகும். அதுவரை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். கோயில் வர்த்தக நகரமாக மாறி வருகிறது. கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு ஆண்டுகள் ஆட்சியில் 30 ஆயிரம் கோடிக்கு மேல ஊழல் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் யாரும் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லஞ்ச ஊழல் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்காக மத்திய அரசு 356 பிரிவை பயன்படுத்தி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் அர்ஜுன் சம்பத், விஜய்யின் பெயரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டுள்ளார். அதாவது தாங்கள் இந்துக்களுக்கு மட்டும் ஆதரவானவர்கள் அல்ல, எந்த மதத்தினரையும் ஆதரிப்போம் என்பதற்காகவே அர்ஜுன் சம்பத் அவ்வாறு பேசியுள்ளார் என கூறுகிறார்கள். ஏற்கெனவே பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மீது சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு விமர்சனம் இருக்கும் நிலையில் அர்ஜுன் சம்பத் அந்த பெயரை அப்படி அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications