விஜய் என்னதான் ஆஃபர் கொடுத்தாலும் யாரும் போக மாட்றாங்களே! பெ.சண்முகம் கிண்டல்
தூத்துக்குடி: ஆட்சியில் பங்கு என விஜய் என்னதான் ஆஃபர் கொடுத்தாலும் அவருடன் எப்படி கூட்டணிக்கு செல்ல முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் கட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருப்பதால், அவர்களுக்கு ஓட்டு இருக்கிறதோ இல்லையோ என நினைத்து யாரும் அவருடன் கூட்டணி சேர முன்வரவில்லை.

கரூர் சம்பவத்துக்கு முன் கொள்கை எதிரி என பாஜகவை விமர்சித்த விஜய், அதற்கு பின் விமர்சிக்கவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென நினைக்கும் ஒருவரை நம்பி எப்படி செல்ல முடியும்?
2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியதன் மூலம் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் கொடுத்தும் யாரும் கூட்டணிக்குச் செல்லவில்லை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரை 'பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா' என மாற்றும் மசோதாவை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாற்றத்தின் நோக்கம் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதுதான் என்று அவர் குறிப்பிட்டார். திட்டத்தில் இருக்கும் 'வேலைக்கான உத்தரவாதம்' என்ற அம்சம் நீக்கப்பட்டால், பயனாளிகள் தங்கள் உரிமையை இழப்பார்கள் என்றும், வேலை வழங்குவது அரசின் விருப்பமாக மட்டுமே இருக்கும் என்றும் பெ. சண்முகம் கூறினார்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று பெ. சண்முகம் கேட்டார். பாஜகவும் அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், அவர்களை தோற்கடிக்கும் பலம் திமுக கூட்டணிக்கு இருக்கிறது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசிய பெ. சண்முகம், விஜய் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர் என்றாலும், கரூரில் நடந்த துயரமான சம்பவத்திற்குப் பிறகு சிபிஐ விசாரணை நடைபெறுவதால், தற்போது அவரை விமர்சிப்பதில்லை என்று கூறினார்.
மேலும், கேரளாவில் ஒரு மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட மாநிலத்தையே வென்றதுபோல ட்வீட் செய்திருந்தார். ஆனால், தமிழகத்தில் திமுக கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் பெ. சண்முகம் உறுதியுடன் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications