தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் கோயிலில் முறைகேடு செய்ததாக அர்ச்சகர் மீது ரமேஷ் நடவடிக்கை எடுத்ததற்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.
திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாகத் திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடி ஏந்தி பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலம் காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சகர்களை இழிவு படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது
பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளியூர்களிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திரு சுதந்திர அர்ச்சகர்கள் மரபு வழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.
அறநிலையத்துறையைச் சார்ந்தவர் அல்லாத திரு சுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபு வழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர் பக்தர்கள் தரும் தட்சணையை பெறுகின்றனர் இந்த நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீகப் பணியை இழிவுபடுத்தி உள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
அறநிலையத்துறை அமைச்சரின் இந்த செயல் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானது அல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.
திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு ஏழாவது முறையாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்து வரும் நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவு படுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் ரமேஷின் சமூகத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! என தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து மாஸ்க் அணிந்து கொண்டு ஆய்வுக்கு சென்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகரிடம் விரைவு தரிசனத்திற்கு எவ்வளவு கட்டணம் என கேட்டதற்கு ஒருவருக்கு ரூ 1000 என அவர் தெரிவித்தாராம்.
உடனே "நாங்கள் 4 பேர் இருக்கிறோம்" என ரமேஷ் சொன்னதும் அந்த அர்ச்சகர் ஒரு ஜிபே எண்ணை அனுப்பி ரூ 4000 செலுத்துமாறு கூறினாராம். அதன்படி ரமேஷும் பணத்தை செலுத்தினாராம். இதையடுத்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்த போது ரமேஷ் இந்த ரூ 4000 முறைகேடு குறித்து அந்த அர்ச்சகரை கண்டித்தாராம்.
இதையடுத்து அந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார் ரமேஷ். ஆனால் அவரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கியதாக தகவல்கள் கிடைத்தன. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வீல் சேருக்காக லஞ்சம் பெற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அர்ச்சகர் மீது அமைச்சருக்கு ஏன் கரிசனம், குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அர்ச்சகர் ஐயப்பன் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications