ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் திடீரென மாயமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டம் குறித்த பல கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கான கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மாநகராட்சி வட்டாரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான கோப்புகள் எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவில்லை. அந்த கோப்புகளை விரைவில் கண்டறிய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவியாளராக இருந்த ஞானசேகரன் கிழக்கு மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர் கோப்புகளை ஒப்படைக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு ஏதுவாக கோப்புகளை வேண்டுமென்றே காணாமல் போக செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து தனி அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமையும் என கூறப்பட்ட சில திட்டங்களையும், மக்களுக்கு மாநகராட்சி திறம்பட செய்து தரவில்லை.
இப்படி பல குளறுபடிகள் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது. இதனையெல்லாம் ஆய்வு செய்ய சென்னையிலுள்ள மாநகராட்சிகளின் ஆணையர் உடனடியாக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications