அதாங்க... மோடி பேரை சொல்வோம்.. ஓட்டு கேட்போம்... அமைச்சர் கடம்பூர் ராஜூ தடாலடி
தூத்துக்குடி:பிரதமர் மோடியின் பெயரை சொல்லி, மக்களிடம் வாக்கு கேட்போம் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வளர்ச்சி மற்றும் பொது மக்கள் நலனுக்கான நலத் திட்டங்களை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, புதிய அலுவலகத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டட பணிக்கு அரசு ரூ. 1 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 8 ஆயிரத்து 182 சதுர அடி பரப்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, கட்டட பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது.

பல்வேறு அறைகள்
புதிய கட்டடத்தில் இணை வேலைவாய்ப்பு அலுவலர் அறை, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிக்கும் அறை, நிர்வாகப் பிரிவு அறை, நூலகம் உட்பட பல்வேறு அறைகள் அமைக்கப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார், அரசு அதிகாரிகள், மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டப்பட்டது
புதிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல்லை நாட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மிரண்டு எதிர்க்கட்சிகள்
அதிமுக கூட்டணியை பார்த்து, எதிர்க்கட்சிகள் மிரண்டு போய் இருக்கின்றன. தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது.

மோடி பெயர்
அதையடுத்து லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துள்ளது. வண்டலூரில், வரும் 6ம் தேதி பிரமாண்டமாக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் பெயரை சொல்லி, மக்களிடம் வாக்கு கேட்போம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications