Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்கப்பட்ட வரலாறு.. லோன் துரை கொலை.. ஆங்கிலேயரை அசைத்து பார்த்த குலசேகரப்பட்டினம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்தியா சுதந்திரத்தை நோக்கி வேகமாக நடைபோட்டு கொண்டிருந்த ஆண்டான
1942-ல் வெள்ளையனே வெளியேறு, செய் அல்லது செத்துமடி போன்ற போராட்டங்களை காந்தியடிகள் அறிவித்தார். சுதந்திர போராட்டம் உச்சம் பெற்று இருந்த அந்த சமயத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

1947 ஆகஸ்ட் 15.. இந்திய சுதந்திர காற்றை சுவாசித்த தினம்... ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் தேசம் சுதந்திர காற்றை சுவாசிக்க உயிர்தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இந்தியா தனது 78-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த தருணத்தில், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் வீர வரலாறுகள் குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம்.

independence day independence day 2024 Kulasekarapattinam

குலசேகரன்பட்டினம்: அந்த வகையில், சுதந்திர போராட்டத்தில் மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மாவீரன் அழகுமுத்து கோன், வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் என நாடறிந்த சுதந்திர போரட்ட தலைவர்கள் கொண்ட பகுதியாக உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தூத்துக்குடிக்கு என்ற தனி இடம் உள்ளது.

அதே வேளையில் தூத்துக்குடியில் அதிகம் அறியப்படாத மறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். அதில் மிகவும் மிக முக்கியமான ஒரு ஊர் தான் குலசை என்ற குலசேகரப்பட்டினம். தசரா திருவிழாவிற்காக உலகம் முழுக்க அறியப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த வீரமிக்க போராட்டம் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்...

உப்பளம் முற்றுகை: நாடு முழுக்க சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது.. 1942 -ல் வெள்ளையர்களிடம் இருந்து தாய்நாட்டை மீட்க பெரும் புரட்சிகள் நாடு முழுக்க நடந்து கொண்டிருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம், செய் அல்லது செத்துமடி ஆகிய போராட்டங்களை அறிவித்தார் தேசத்தந்தை காந்தியடிகள். அப்போது உப்பு சத்தியாகிரக போராட்டமும் தீவிரமாக இருந்தது.

அந்த சமயத்தில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இருந்த உப்பளத்தை திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் ஒன்று திரண்டனர். நள்ளிரவில் உப்பளத்தை முற்றுகையிட்டனர். இதைப்பார்த்த அங்கு இருந்த போலீசார் இளஞர்களை தாக்கவும், கொல்லவும் முயன்றனர். இதனால் உஷாரான இளைஞர்கள் போலீசாரை கட்டிப்போட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

லோன் துரை கொலை: அப்போது ஆஷ் துரை போல பெரும் கொடுமைகளை செய்து வந்த லோன் துரை (salt Wilfred Loane) என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளம் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பங்களாவில் இருந்தார். விடுதலை இயக்க வீரர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த லோன் துரை, இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றான். பி.எஸ் ராஜகோபாலன் என்ற விடுதலை இயக்க வீரரை குறிவைத்து லோன் துரை சுட முயன்ற போது, காற்றை கிழித்துக்கொண்டு வந்தது ஒரு கூர்மையான ஆயுதம்..

விடுதலை இயக்க வீரர் ஒருவர் வீசிய அந்த கூர்மையான ஆயுதமானது, லோன் துரையின் கழுத்தை பதம் பார்த்தது. இதில் லோன் துரை அப்படியே செத்து மடிந்தான். இந்த சம்பவம் ஆங்கிலேயர்களை அலறவிட்டது. தெற்கில் கடைகோடியில் உள்ள கிராமப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நடத்திய இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன பிரிட்டிஷார் குலசேகரப்பட்டினம் சதி வழக்கு என்ற ஒன்றை போட்டனர். இந்த வழக்கை விசாரிக்க திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

மரண தண்டனை: பாலகிருஷ்ண அய்யர் என்ற நீதிபதி இந்த வழக்கை விசாரித்தார். வழக்கு விசாரணையின் முடிவில், விடுதலை இயக்க வீரர்கள் காசிராஜன், ராஜகோபாலுக்கு மரண தண்டனையும் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறையும் வழங்கினார். மேலும், ஒருவருக்கு 7 ஆண்டுகள், இருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர், வேலூர், நெல்லை, கொக்கிரகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை காந்திஜி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களை விடுதலை செய்ய காந்திஜி, ராஜாஜி உள்ளிட்டோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்கள். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பாலும் 20 வயதுகளில் இருந்தவர்கள்.

தூக்குமேடை ராஜகோபாலன்: காந்திஜி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களின் தீவிர முயற்சியின் பலனாக இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் என்பவர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். 1946-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெட்ராஸ் மாகாணத்தில் டி. பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் இடைக்கால அமைச்சரவை அமைத்தது. அதன்பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.

இந்த வழக்குக்கு பிறகுதான் ராஜகோபாலன் 'தூக்குமேடை ராஜகோபாலன்' என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 26 பேரையும் தியாகிகளாக அரசு அறிவித்து ஓய்வூதியத்தையும் அளித்தது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக அப்போது தூத்துக்குடி மற்றும் குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் இருந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+