ஒரே ஒரு போன் கால்; நள்ளிரவு 1 மணி வரை களத்தில்; கனிமொழியின் அதிரடியால் அதிகாரிகள் திணறல்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவு 1 மணி வரை களத்தில் நின்று கால்வாய் உடைப்பை சரி செய்த பின்னரே வீட்டுக்கு சென்றிருக்கிறார் கனிமொழி எம்.பி.
ஊருக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளதாக கிராமமக்கள் அலைபேசி மூலம் கனிமொழியிடம் தெரிவித்த நிலையில் இரவு நேரம் எனக் கூட பாராமல் நிகழ்விடத்துக்கு சென்றுவிட்டார் அவர்.
வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சற்று நேரத்தில் அங்கு வரவழைத்து கால்வாய் உடைப்பை சரி செய்த பின்னரே புறப்படுவேன் எனக் கூறி வேலையை முடித்துவிட்டுத் தான் கிளம்பியிருக்கிறார்.

பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்கு முகாமிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கனிமொழி எம்.பி. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான தெற்கு ஆத்தூர், தண்ணீர் பந்தல், நாககன்னியாபுரம், புறையூர், கீழ கல்லாம்பாறை, அங்கமங்கலம், திருச்செந்தூர், என ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

ரெஸ்ட் எடுங்க
இந்நிலையில், குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் கால்வாய் உடைந்ததால் வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக கனிமொழிக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு உரிய அதிகாரிகளை வரவழைத்து கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட கனிமொழி நள்ளிரவு 1 மணி வரை களத்திலேயே நின்றிருக்கிறார். ''நீங்க ரெஸ்ட் எடுங்க மேடம் நாங்க பார்த்துக்கொள்கிறோம்'' என அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் கேட்டுக்கொண்டும் அதை ஏற்க மறுத்து வேலை முடியும் வரை நிகழ்விடத்திலேயே இருந்திருக்கிறார்.

அதிகாரிகள் திணறல்
மழைவெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வேகம் காட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் அவரைப் போலவே இவரும் வேகம் காட்டி வருகிறார் கனிமொழி எம்.பி. இதனால் மாநகராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கனிமொழி எம்.பி.யின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சென்னை மேயர்
இதனிடையே கனிமொழியின் மழைவெள்ள ஆய்வு படங்களை சுட்டிக்காட்டி சென்னை மேயராக நீங்கள் வரவேண்டும் என மகளிர் அணி நிர்வாகிகளும் திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் ஒரு சிலரும் கனிமொழியை வலியுறுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை மேயர் பதவி பெண்கள் கோட்டாவிற்கு ஒதுக்குவது பற்றி மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications