தமிழர்களை அவமதிக்கக் கூடிய பாஜக ஆட்சி தொடரலாமா- கனிமொழி கேள்வி
Recommended Video

கோவில்பட்டி: தமிழகத்துக்கு துரோகம் செய்யக்கூடிய, தமிழர்களை அவமதிக்கக்கூடிய பாரதிய ஜனதா ஆட்சி இந்தியாவில் தொடரலாமா?. கோவில்பட்டி அருகே கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இன்று அவர் தனக்கும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரங்குடி, விளாத்திகுளம், பசுவந்தனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருடன் உதயநிதி ஸ்டாலினும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது கனிமொழி பேசுகையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வந்து சேர்ந்து விட்டதா, என்று கேட்டார்.

பாதிப்பு
அனைவருக்கும் பயிர் காப்பீட்டு தொகை பிரதமர் கொடுத்துவிட்டார் என பாரதிய ஜனதா கட்சியினர் பொய் கூறுகின்றனர். யாருக்காவது கிடைத்ததா? ஒரு லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகள் தூத்துக்குடியில் மட்டும் பயிர் காப்பீட்டு தொகை வராமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயிர் காப்பீடு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுதி அனுப்பிய 45 ஆயிரம் பேருக்கு கூட வரவில்லை. அதுதான் உண்மை. தமிழகம் முழுவதும் 8 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வந்து சேரவில்லை.

போராட்டம்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். டெல்லியில் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்காக போராடினர்.

அவமானம்
ஒரு மாதத்துக்கு மேல் ஒரு நிமிடம் பிரதமரை பார்க்க வேண்டும் என போராடினர். ஆனால், அனைத்து இடங்களுக்கும் செல்லக்கூடிய பிரதமர், விவசாயிகளை சந்திக்க நேரமில்லை. அவ்வளவு அவமானப்படுத்தி அவர்கள் மறுபடியும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தேர்தலில் வாக்களிக்க
இப்படி தமிழகத்துக்கு துரோகம் செய்யக்கூடிய, தமிழர்களை அவமதிக்கக் கூடிய பாரதிய ஜனதா ஆட்சி இந்தியாவில் தொடரலாமா?. அவர்களுக்கு இங்கே பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற கூடிய அதிமுக ஆட்சியை மக்கள் நினைத்தால் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்பதை உணர்ந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications