தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா! களமிறங்கிய கனிமொழி எம்.பி.! காரியமாற்றும் அதிகாரிகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெய்தல் கலை விழாவை நடத்தும் கனிமொழி எம்.பி., அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
நெய்தல் திருவிழாவின் புரோமோஷனுக்காக கடல் பயணம் எல்லாம் சென்று அங்கு நடுக்கடலில் இட்லியையும், இறால் தொக்கும் சாப்பிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும், தொடர்ந்து தூத்துக்குடியிலேயே முகாமிட்டு நெய்தல் திருவிழாவுக்கான பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார்.

நெய்தல் கலை விழா
தூத்துக்குடியில் ஜூலை 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நெய்தல் கலை விழாவை நடத்துகிறார் கனிமொழி எம்.பி. கடலும் கடல் சார்ந்த தொழிலும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் இதற்கான பணிகளை முன்னெடுக்கிறார். இதனிடையே அந்த விழாவின் முன்னோட்டமாக கடல் பயணம் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை கடற்பரப்பு அதிகம் உள்ள ஒரு தொகுதியாகும். மீனவர்களின் வாக்கு வங்கி அங்கு வெற்றித்தோல்வியை தீர்மாணிக்கும் சக்தியாக திகழ்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே அதற்கான களப்பணிகளை கனிமொழி ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

தொகுதியில் முகாம்
ஏனெனில் அந்தளவுக்கு வாரத்தின் பெரும்பாலான நாட்கள் தனது தொகுதியான தூத்துக்குடியில் தான் முகாமிடுகிறார் கனிமொழி எம்.பி. இதனால் அவரை காணச் செல்லும் தொகுதி மக்கள் எளிதாக சந்தித்து தங்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவிக்கின்றனர். அவற்றின் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் சுடச் சுட நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுக் கொடுப்பதால் கனிமொழியை கொண்டாடுகின்றனர் தூத்துக்குடி தொகுதி மக்கள்

உணவுத் திருவிழா
நெய்தல் விழாவில் புத்தக அரங்கம், கடல் உணவுத் திருவிழா, தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளான கரகம், பறையாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் கனிமொழி எம்.பி. இதனால் இப்போதே அந்த விழாவுக்கான எதிர்பார்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications