சீட் வாங்கிட்டோம் என பெருமை கூடாது! கட்சியினரை அனுசரியுங்கள்! திமுக வேட்பாளர்களுக்கு கனிமொழி அட்வைஸ்
தூத்துக்குடி: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களையும் அனுசரிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. அறிவுரை கூறியிருக்கிறார்.
Recommended Video
சீட் கிடைத்துவிட்டது என்பதற்காக திமுகவில் நீங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என வேட்பாளர்களுக்கு குட்டு வைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அவர் இதனைக் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலமும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி களத்தில் இறங்கியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள் அரங்க கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

மக்கள் நலத் திட்டங்கள்
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த அவர், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற வைத்தால் தமிழக அரசின் திட்டங்கள் தடங்கலின்றி கிடைக்கக் கூடும் எனத் தெரிவித்தார். கோவில்பட்டி தொகுதியில் எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் அந்த தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ சிக்கல் கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

உள்ளாட்சித் தேர்தல்
இதனால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கக் கூடிய வகையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர முடியாது என்பதால் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதாக கூறிய அவர், வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் உயர்ந்தவர்களாக கருத தேவையில்லை எனத் தெரிவித்தார்.

சீரியஸ் அட்வைஸ்
தேர்தலில் போட்டியிடுபவர்களை காட்டிலும் போட்டியிடாமல் கட்சிக்காக உழைக்கக் கூடியவர்களே உயர்ந்தவர்கள் என்றும் அப்பேற்பட்டவர்களை வேட்பாளர்களாக இருப்பவர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும் எனவும் சீரியஸான முறையில் அட்வைசும் தந்தார். வேட்பாளராகிவிட்டோம் ஆளுங்கட்சி என்பதால் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அசாதாரண நம்பிக்கையில் இருப்பவர்கள் பலருக்கும் கனிமொழியின் இந்த அறிவுரை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications