100 பேர் இறப்பார்கள் என அஞ்சினேன்.. உலகின் பெருமழையில் காயல்பட்டினம் மீண்டது! மருத்துவர் நெகிழ்ச்சி
தூத்துக்குடி: உலக வரலாற்றிலேயே குறைந்த நேரத்தில் அதிக மழைப் பொழிவை சந்தித்த காயல்பட்டினம் பகுதி எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியதாக மருத்துவர் முஹம்மது கிஜார் தெரிவித்து உள்ளார்.
காயல்பட்டினத்தை சேர்ந்த மருத்துவர் கிஜார் தொலைக்காட்சி, ஊடகங்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருபவர். காயல்பட்டினத்தில் கொட்டித்தீர்த்த பெரு மழையில் வெள்ளத்தில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

அதில், "காயல்பட்டினம் மீண்டது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பேராபத்து... பேருதவி.. உலகிலேயே 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்த ரெக்கார்ட். டெனிஸ்e புயலினால் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 7 to 8 நாட்களில் தெற்கு இந்திய பெருங்கடல் உள்ள தீவான ஃபால் - ஃபாக், லா ரீயூனியன், 182.5 சென்டிமீட்டர் மழை. இதை கணக்கிட்டதில் பிழை ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இப்போதைய புள்ளி விவரப்படி, மேகாலயா மாநிலம் மாசின்ராம் என்ற இடத்தில் 24 மணி நேரத்தில் 100.36 cm மழை தான் அதிகபட்ச மழை.
ஆனால் கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினதில் 18 மணி நேரத்தில் 93 செமீm மழை பெய்துள்ளது. இதை 24 மணிநேர மாசின்ராம் அதிக பட்ச மழையை ஒப்பிடும் போது அதிகம். ஒப்பீட்டு அளவில் மாசின்ராம்m ஒரு காசி மலையில் உள்ள மலை பிரதேசம். அதனால், பெரும் மழை வழிந்து ஓடி விடும். ஆனால் காயல்பட்டினம் ஒரு சமவெளி பிரதேசம். மழை நீர் உடனே வழிந்து ஓட வாய்ப்பே இல்லை. அதுவும் 18 மணிநேரம் தொடர்ந்து வரலாறு காணாத அதி கனமழை பெய்யும் போது.
மழை பெய்த போது வீட்டில் இருந்து அவதானித்து கொண்டிருந்த நான் இதிலிருந்து மீள குறைந்தது 3 மாதம் ஆகும் என்று எண்ண கணக்கிட்டு இருந்தேன். மழையின் வீரியத்தை கண்ட போது, உயிரிழப்புகள் கூட சில நூறில் இருக்கும் என பயந்தேன். கால்நடை இறப்புகள் இருக்க அதிக வாய்ப்பு என்றேன். உடனடி மறு வாழ்வுக்கே பல வாரம் ஆகலாம் என்ற கணிப்பு தான். மக்களில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பது தவிர்க்க முடியாதது என்று கூட நினைத்தேன். அடுத்த நாள் உணவு, பாலுக்கு எங்கே செல்வது என்ற சிறு அடிவயிறு கலக்கம்.
அந்த வாரம் மருத்துவமனை வழிந்து, நம் பணிச்சுமை பலமடங்கு அதிகமாகவே செய்யும் என மனதளவில் கூட தயாரானேன். அன்று இரவு மன அழுத்தத்தில் கழிந்தது, மறுநாள், வரும் நாட்களில் சந்திக்க போகும் துன்பம் மிகுந்த இன்னல்களை நினைத்தேன். ஆனால் மறுநாள் காலை, என்னையே என்னால் நம்ப முடியாத ஆச்சரியம். இதையெல்லாம் தாண்டி மறுநாள் காலையே என்னால் பணிக்கு சற்றே சிரமத்துடன் நேரத்திற்கு செல்ல முடிந்தது. தாழ்வான பகுதி தவிர கிட்ட தட்ட மற்ற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மறுநாளே திரும்பியது என்றே சொல்லலாம். (மின்சாரம், மொபைல் நெட்வொர்க், உணவு பால் தவிர)..
ஒருவர் கூட பட்டினி கிடக்காமல் தன்னார்வலர்கள் கவனித்து கொண்டார்கள். உயிரிழப்பு ஒன்று கூட இல்லை.. இறைவன் உதவியால்.. மருத்துவமனை வழக்கம் போல் மழையினால் கூடுதல் சுமை பெரிய அளவில் இல்லை இதே அளவு மழை , இவ்வளவு குறுகிய நேரத்தில் பெய்தால், அது அந்த ஊரையே அழித்து, வரைபடத்தில் அந்த ஊர் இருந்த இடம் தடயம் இல்லாமல் காணமல் போகி, ஒரு சரித்திரத்தில் மட்டுமே இடம் பெற்று இருக்க வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி காயல்பட்டினம் தாக்கு பிடித்து கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியது எப்படி? என்று ஆச்சர்யத்திலும் ஆச்சரியம் ஆக உள்ளது. இது மனித சக்தி மீறி நடந்த மறுவாழ்வு நிவாரண பணியாகவே எண்ணுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications