Kulasai Dasara: கொடியேற்றத்துடன் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற 'குலசை தசரா' திருவிழா.. 12 ஆம் தேதி சூரசம்ஹாரம்!
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. குலசை தசராவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 12 நள்ளிரவில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் கோவில். இங்கு நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குலசை தசரா விழாவில் கலந்து கொண்டு, வேண்டுதல் செய்வதும், பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.

நவராத்திரி காலத்தில் வட இந்தியாவில் தான் தசரா பண்டிகை, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நடைபெறும். தமிழகத்தில் விஜயதசமி என்ற பெயரிலேயே கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா பிரசத்தி பெற்றது. தமிழகத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் ஒரே கோவில் குலசேகரப்பட்டினம் தான். நவராத்திரி துவங்கியது முதல் 11 நாள் திருவிழாவாக தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் தசரா திருவிழா குலசேகரத்தில் விமரிசையாக தொடங்கி உள்ளது. தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தது. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து, கொடி மரத்திற்கு அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்து, “ஓம் காளி ஜெய் காளி” என்று கோஷமிட்டனர். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் கைகளில் கோவில் பூசாரி காப்பு கட்டினார். தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
முதல் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், இரண்டாம் நாளில் கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3ஆம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4ஆம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் அருள் பாலிப்பார்.
5 ஆம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
பத்தாவது நாளான அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்காரம் நடைபெறும். 11-ம் திருநாளான அக்டோபர் 13-ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். தசரா திருவிழாவின் நிறைவு நாளான 14ஆம் தேதி காலையில் சிறப்பு அபிசேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications