குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்.. கோவில் வளாகத்தில் நடைபெற்றது
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் திருநாளான நேற்று இரவு நடைபெற்றது. எனவே நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு சென்றடைந்தார். பின்னர் மகிஷாசூரனை அம்மன் திரிசூலத்தால் சம்ஹாரம் செய்தார். அம்மனின் மனதை குளிர்விக்க சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் முத்தாரம்மன் கோவில் வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு, கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்றது. வழக்கமாக சுமார் 5 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரம் நடக்கும்போது கடற்கரையில் கூடியிருந்து வழிபடுவார்கள். ஆனால், இந்த முறை கோவில் வளாகத்தில், கோவில் குருக்கள்கள், நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தினர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
11-ம் நாளான இன்று அதிகாலையில் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் கோவிலை சுற்றி பவனி வருகிறார். மாலையில் அம்மன் கோவிலை வந்தடைந்ததும், கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
விழாவின் நிறைவு நாளான நாளை, புதன்கிழமை மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications