குலசை முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை.. அரை கோடியை நெருங்கியது! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அந்த வகையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக மட்டும் சுமார் அரை கோடி ரூபாய் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் 125.500 கிராம் தங்கமும், 1 கிலோ 100 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். நாட்டிலேயே மைசூருக்கு அடுத்ததாக இங்கு தான் தசரா விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

குலசை முத்தாரம்மன் கோவில்
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த குலசை தசரா விழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பத்து நாட்களும் தூத்துக்குடி குலசை பகுதி களை கட்டும். தெருக்கள், வீதிகள் எங்கும் விழா கொண்டாட்டமாக நடைபெறும். காணும் இடமெல்லாம் அன்னதானமும் நடைபெறும்.
விழாவில் திருக்காப்பு கட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து மக்களிடம் காணிக்கை பெற்று, கோவிலில் அதை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். அந்த வகையில் தான் கடந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த அக்டோப்ர் மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.
அரை கோடியை நெருங்கிய உண்டியல் காணிக்கை
உள்ளூர், வெளியூர் என பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து அம்மனை வழிபட்டனர். ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறாக மொத்தம் 12 நாட்கள் தசரா விழா கொண்டாட்டத்தோடு நடந்து முடிந்தது. இந்த நிலையில் தான் குலசை முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை அரை கோடி ரூபாயை நெருங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
குலசை முத்தாரம்மன் கோவிலில் மொத்தம் 18 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. உள்ளது. இதன் காரணமாக மாதந்தோறும் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையினை எண்ணும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியானது நடந்தது.
1 கிலோ வெள்ளி, 125 கிராம் தங்கம்
சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் இந்த காணிக்கைகள் எண்ணும் பணியானது நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் மட்டும் அரை கோடியை நெருங்கியது.
அதாவது ரூ.48 லடத்து 80 ஆயிரத்து 142 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் போக தங்கம் மற்றும் வெள்ளியாகவும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள். இதன்படி தங்கம் மட்டும் 125.50 கிராம் செலுத்தியுள்ளனர். வெள்ளி மட்டும் 1 கிலோ 100 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications