குலசை கடற்கரையில் நள்ளிரவில் மகிஷாசூரனை சூரசம்ஹாரம் செய்த முத்தாரம்மன்.. மெய்சிலிர்த்த பக்தர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. குலசை கடற்கரையில் முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை சென்ற காட்சியை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். இந்த நிகழ்வை காண குலசேகரப்பட்டினம் கடற்கரையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழா, கடந்த 23ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்ததது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்தார்.

இதனிடைமேய குலசை தசரா திருவிழாவையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து வேடமணிந்து கோயிலுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்கள் அனைவருமே குலசையில் நள்ளிரவில் குவிந்துள்ளனர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நள்ளிரவில் தொடங்கியது. நள்ளிரவில் சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்றாள். அப்போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து சென்றார்கள்.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். முத்தாரம்மன் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்தது. நள்ளிரவில் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து அதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுகிறார். பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிக்க உள்ளார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்க உள்ளது.
சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications