திருச்செந்தூரில் மாயமான பிளஸ் 2 மாணவி.. 2 மணி நேரத்தில் போலீஸ் சூப்பர் சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மாயமான பிளஸ் டூ மாணவியை, புகார் அளித்த இரண்டே மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சம்பவம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுதுவதற்காகச் சென்ற அந்த மாணவி, தேர்வு முடிந்தும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் வீடுகள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நேற்று இரவு 8 மணியளவில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் கண்ணீருடன் புகார் அளித்தனர். களத்தில் இறங்கிய தனிப்படை புகார் பெறப்பட்டவுடன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், மாணவியை உடனடியாக மீட்க உத்தரவிட்டார்.
காவல் ஆய்வாளர் திலீபன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் முகிலரசன், தலைமை காவலர்கள் ஜெயகாந்த், வேலுமணி மற்றும் பெண் தலைமை காவலர் சுகந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி கொடுத்த க்ளு
போலீசார் காயல்பட்டினம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளி முடிந்தவுடன் அந்த மாணவி ஒரு இளைஞரின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த அடையாளங்களை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், மாணவி இருக்கும் இடத்தை அதிரடியாகக் கண்டறிந்தனர்.
2 மணி நேரப் போராட்டம் - இனிப்பான முடிவு
தனிப்படையினரின் துரிதமான தேடுதல் வேட்டையின் பலனாக, இரவு 10 மணியளவில் (புகார் அளித்த 2 மணி நேரத்தில்) அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவிக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, இன்று மாலை பாதுகாப்பிற்காக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பொதுமக்கள் பாராட்டு
"பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறை இவ்வளவு வேகமாகச் செயல்பட்டது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது" என காயல்பட்டினம் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பொதுவாக இது போன்ற சம்பவம் நடந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தால் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். தாமதிக்காமல் காவல் துறையில் புகார் அளிப்பது நிவாரணத்தை தரும்.












Click it and Unblock the Notifications