திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை அருகே.. தீக்குளித்த நபர்.. அதிர்ந்த பக்தர்கள்.. என்ன நடந்தது
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் இன்று நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த நபர் திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த நபர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு ஏராளமானவர்கள் குவிந்து வருகிறார்கள்.

பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இங்கு குவிந்து வருகிறார்கள். இதனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில், உடலில் தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அவர் கத்தினார். அருகில் இருந்தவர்களும் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 95 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் தீக்குளித்த நபர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்தது. எதற்காக உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications