கல்யாண வீட்டுல பேசுற பேச்சா இது.. சங்கடத்தில் நெளிந்த வைகோவை கூப்பிட்ட திருமண வீட்டார்
துாத்துக்குடி: "இங்கே அமர்ந்திருக்கும் மணமக்களை போல 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என திருமண வீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதால் திருமண வீட்டார் சங்கடத்தில் நெளிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக முன்னாள் எம்.பி ரவிசந்திரன் இல்ல திருமணம் நேற்று நடந்தது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். ஆனால் அவருடைய பேச்சால், மணமக்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுட்டுக் கொல்லப்பட்ட புதுமண தம்பதிகளை, திருமண வீட்டில் மேடையில் அமர்ந்திருந்த மணமக்களுடன் ஒப்பிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதால் மணமக்கள், திருமண வீட்டார், வந்திருந்த உற்றார் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வைகோ பேசுகையில், "உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் என்னை சந்திக்க வேண்டும் என தலைகீழாக நின்றார். ஆனால், ஒரு நிமிடம் கூட அவரை சந்திக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு, எனக்கும் ம.தி.மு.கவுக்கும் தான் உண்டு.
தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி, சாத்துார் பகுதிகளில் விவாகரத்து ரொம்பவும் அதிகமாக உள்ளது. நாடு தற்போது பதற்றமான நிலையில் உள்ளது. இங்குள்ள மணமக்கள் இருவருக்கும் நல்ல பொருத்தம். படிப்பிலும், அழகிலும் கூட பொருத்தமான ஜோடி. இதேபோல, மாலையும், கழுத்துமாக தேனிலவிற்கு சென்ற 4 தம்பதிகள் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்." எனப் பேசினார்.
மேலும், "இந்தியாவில் விவசாயிகள் நொறுங்கிப் போய் உள்ளனர். அவர்கள் முதுகெலும்பும் நொறுங்கிப் போய் உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் அழிந்துபோன விவசாய குடும்பங்கள் ஏராளம். தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம். உலகத்தில் உணவுப் பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயிகளை எல்லோரும் தேடுவார்கள்" என்றார்.
திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்திப் பேசவேண்டிய நேரத்தில் வைகோ, பஹல்காமில் கொல்லப்பட்டவர்களோடு ஒப்பிட்டு பேசியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவருமே அதிர்ந்து போயினர். பேச்சாற்றலுக்குப் பெயர் போன வைகோ, சூழல் புரியாமல் இப்படிப் பேசியது திருமண வீட்டாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications