ஆதாரமில்லை.. கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு.. நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கு 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னண் இன்று விடுவிக்கப்பட்டார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீதான கொலை முயற்சி கடந்த 2011ல் நடந்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் தான் 13 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னண் விடுவிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த 2001 முதல் அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2001, 2006ல் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இவர் இருந்தார். அதன்பிறகு 2011, 2016, 2021ம் ஆண்டுகளில் திமுக சார்பில் எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் ஏற்கனவே அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மீனவர், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக உள்ளார். தென்தமிழகத்தில் திமுகவில் முக்கிய தலைவராக அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளார்.
தலைக்கேறிய ஜாதி வெறி.. “கோயிலுக்கு வந்தால் கொல்வேன்”.. தலித் இளைஞரை தாக்கிய திமுக நிர்வாகி கைது
திமுக நகர செயலாளர் கொலை செய்ய முயற்சி
இந்நிலையில் தான் கடந்த 2011ல் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்த சுரேஷ் என்பவர் மீது கொலை முயற்சி சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
இந்த வழக்கில் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலில் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் சேர்க்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
அதாவது ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வேளையில் வழக்கு விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நேரில் ஆஜராகினர்.
விடுதலை
இந்நிலையில் தான் வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை நீதிமன்றம் விடுவிப்பு செய்தது. குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிம்மதி அடைந்துள்ளார்.