இலங்கைக்கு கடத்தப்பட்ட மர்ம படகு.. தூத்துக்குடியில் தடுத்த போலீஸ்.. உள்ளே பார்த்தால் அதிர்ச்சி!
தூத்துக்குடி : தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியாலும், உணவுப் பொருள்களின் மிதமிஞ்சிய விலை ஏற்றத்தாலும் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டுள்ளனர். மேலும், பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வரக் கூடும் என்பதால், இந்திய கடற்படையின் ஹோவர் கிராஃப்ட் ரோந்துப் படகு மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவு, தங்கம், எரிபொருள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றனவா? என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஒரு படகில் பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றவியல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணிதர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனை செய்தனர். அதில், 443 அட்டைகளில் 4,430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
போலீசாரை கண்டதும் படகில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டதால், மாத்திரைகளையும், படகையும் கைப்பற்றிய போலீசார், அவைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், வலி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும், அங்கு இந்த மாத்திரைகளுடன் கூடுதல் பொருள்களை சேர்த்து போதைப்பொருளாக பயன்படுத்தப்படுவதாவும் போலீசார் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த மாத்திரைகள், நரம்பு வலி, நடுக்கம், வலிப்பு போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மேலும், இது நீரிழிவு நரம்பு வலி, வலிப்பு, தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக் கோளாறுகளுக்கும் இந்த மாத்திரைகள் சிகிச்சைக்குப் பயன்படுவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு, தமிழகத்தில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவ்வவ்போது கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய், களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில், தற்பொழுது வலி நிவாரண மாத்திரைகளும் கடத்தப்பட்ட சம்பவம், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications