கொரோனாவைவிட கொடூரமான ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்
தூத்துக்குடி: கொரோனாவை விட கொடூரமான ஸ்டெர்லைட் ஆலையை எத்தனை உயிர்கள் போனாலும் திறக்க விடமாட்டோம் என்று தூத்துக்குடி பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
Recommended Video
தூத்துக்குடியில் நிலத்தடி நீரையும் காற்றையும் நஞ்சாக்கி உருக்குகிறது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட். இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2018-ல் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து சுற்றுச் சூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
டாப் கியர் போட்ட அதிமுக.. டக்கர் பிளான் ரெடி.. அதிரடி உத்திகள்.. சட்டசபை தேர்தலுக்கு சூப்பர் ரெடி!
உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா
இதனை பயன்படுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாகவே தருகிறோம் என்கிறது வேதாந்தா. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது வேதாந்தா.
தமிழக அரசு எதிர்ப்பு
வேதாந்தா குழுமத்தின் மனுவை ஏற்று ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்கிறது மத்திய அரசு. ஆனால் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் யோசனை
அதேநேரத்தில் உச்சநீதிமன்றமோ, தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என யோசனை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடியில் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தலாமா? என பொதுமக்களிடம் ஆட்சியர் கருத்து கேட்டார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு
ஆனால் ஒட்டுமொத்த பொதுமக்களுமே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவே கூடாது என உறுதியான குரலில் தெரிவித்தனர். சுவாசிக்க வேண்டிய காற்றை நாசமாக்கிவிட்டு இப்போது சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜனை தயாரித்து கொடுக்கிறேன் என்கிறது வேதாந்தா. ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது மீண்டும் திறந்துவிடலாம் என கணக்குப் போட்டு செயல்படுகிறது வேதாந்தா குழுமம். கொரோனாவைவிட கொடூரமானது வேதாந்தா குழுமம் என்பது பொதுமக்களின் கருத்து.
சதியை முறியடிப்போம்
மேலும் எங்கள் பிணங்கள் மீதுதான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிய்ம். ஆக்சிஜன் தேவை எனில் அதை சரி செய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை மட்டும்தான் தீர்வு அல்ல. மரண வாசலான ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என சதித்திட்டத்துடன் இறங்கியிருக்கிறது வேதாந்தா. இதனை நாங்கள் முறியடித்தே தீருவோம் என்றும் பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.