இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.. மோடி சொன்னதை கவனிச்சீங்களா?
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அப்போது, இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் இன்று (செப்டம்பர் 16) தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அகமதாபாத் - புஜ் இடையேயான குளிர்சாதன வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். குஜராத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மேலும், காணொளிக் காட்சி வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், துறைமுக ஆணையத்தில் பல்வேறு திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், பணிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், மத்திய கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகஅமைச்சர்கள் எ.வ.வேலு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சரக்குப் பெட்டக முனையத்தை காணொளிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி இதுபற்றி உரையாற்றினார். மோடி பேசுகையில், "வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இந்த சரக்குப் பெட்டக முனையம், இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.
14 மீட்டருக்கு அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்குப் பெட்டக முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு. இதன் ஊழியர்களில் 40% பெண்கள், இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது. மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 சிறிய துறைமுகங்களுடன் தமிழ்நாடு கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியப் பங்குதாரராக மாறி வருகிறது. இந்த வளர்ந்துவரும் திறன், நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும். இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காக, வெளி துறைமுக கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதில், ரூ.7,000 கோடிக்கு மேல் அரசு முதலீடு செய்துள்ளது. நம் நாடு தற்போது சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவற்றின் பரந்த நெட்வொர்க் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது." என்று பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications