சாத்தான்குளம் பெண் காவலரிடம் போனில் பேசிய நீதிபதிகள்.. அரிவான்மொழியில் ரேவதி வீட்டுக்கு பாதுகாப்பு
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சாட்சி கூறிய காவலர் ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் அச்சத்துடனேயே நடந்தவற்றை சாட்சி சொன்னவர் காவலர் ரேவதி. இவர் கூறிய சாட்சியால்தான் இந்த வழக்கில் இத்தனை திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை ரத்தம் சொட்ட சொட்ட விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் அவர் சாட்சியம் அளித்தார். இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், காவலர்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சிபிசிஐடி விசாரணைக்கும் முடுக்கிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் உயரதிகாரிகளால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவலர் ரேவதி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையே பெரும்பாலானோர் வலியுறுத்தினர். இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து காவலர் ரேவதியுடன் நீதிபதிகள் செல்போனில் பேசினர். நீதிபதிகள் உத்தரவை அடுத்து அரிவான்மொழியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு வாயிலில் இரு காவலர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications