மீண்டு வருவார்னு நம்பினேன்! ஆனா பொதுக் குழுவில் விஜியை பார்த்ததும் நம்பிக்கை குறைந்தது.. ரஜினி
தூத்துக்குடி: விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்த போது அவருக்கு நிமோனியா தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு காலமானார். விஜயகாந்தின் உடலுக்கு நேற்றைய தினம் லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தநிலையில் இடநெருக்கடி காரணமாக விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலிருந்து அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்காக இரவோடு இரவாக பேரிகாடுகள் அமைக்கும் பணிகள், மேடைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. அது போல் கழிப்பறை, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டன. அது போல் விஜயகாந்தின் உறவினர்கள் உட்காரவும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் கட்சி அலுவலகத்திலேயே நடிகர்கள் விஜய், விஜய் ஆண்டனி, சத்யராஜ், நாசர் மன்சூர் அலிகான், பாலா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அது போல் நடிகை கவுதி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்றைய தினம் தீவுத்திடலில் நடிகர்கள் ராம்கி, தாமு, என்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருக்கோவிலூர், மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு வந்து கொண்டிருக்கிறார்.
அவர் தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவர் ஒரு அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரை கடைசியாக பொதுக் குழுவில் பார்த்த போது எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.
அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார்; தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம் என தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications