தென் மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..என்ன காரணம்
தூத்துக்குடி: சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற போராட்டமாக மாறும் என துத்துக்குடியில் உள்ள பாரத் கேஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் லாரி ஓட்டுநர்கள் எச்சரித்து இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் தடை படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பாரத் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு வரும் கேஸ் சிலிண்டர்கள் அங்கிருந்து லாரிகள் மூலமாக ஏற்றப்பட்டு தென் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கேஸ் ஏஜென்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் இந்த சிலிண்டர்கள் அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், துத்துக்குடியில் உள்ள பாரத் கேஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுநர்களாக செயல்படும் டிரைவர்கள் இரவு திடீரென போராட்டத்தில் குதித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இந்த லாரி ஓட்டுநர்களுக்கு 150 கி.மீட்டருக்கு ரூ. 500 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கிடையில், தங்களுக்கு மாத ஊதியம் தனியாக வழங்க வேண்டும் என்று 12 ஆம் தேதி போரட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று வட்டாட்சியர் முன்னிலையில் ஊதிய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியில் இருந்து ஓட்டுநர்களை வரவழைத்து லாரிகளை இயக்கியதால் அந்த லாரிகளையும் மறித்து ஓட்டுநர்கள் போராட்டம் செய்தனர்.

பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற போரட்டமாக மாறும் என ஓட்டுநர்கள் எச்சரித்து இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் தடை படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கணேஷ் என்ற லாரி ஓட்டுநர் கூறியதாவது:-
தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. லோடு ஏற்றுவதற்காக சிலரை வலுக்கட்டாயமாக அழைத்துள்ளனர். இது தொடபாக யூனியனில் பேசியிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும் வரை எந்த ஒரு லாரியையும் உள்ளே விடாமல் நிறுத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications