சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. 3 மாதத்தில் முடிக்க வேண்டும்.. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயராஜ் மனைவி செல்வராணி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளை, விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு காலக்கெடு விதித்துது. அந்த காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை முடிக்க மேலும் 5 மாதம் அவகாசம் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தரப்பிலும் 8 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது எனவும் 2 முதல் 3 மாத கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications