செல்வராணி அம்மாவுக்கு ஆறுதல்... கமல் பேசிய சற்று நேரத்தில் ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு
தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம் அடைந்த ஜெயராஜ்,பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேற்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
கமல் ஆறுதல் கூறிய சற்று நேரத்தில் ரஜினியிடம் இருந்து ஜெயராஜ் குடும்பத்திற்கு அழைப்பு வந்துள்ளது.
கணவனையும், மகனையும் பறிகொடுத்துள்ள செல்வராணிக்கு ஆறுதலும், இரங்கலும் ரஜினி கூறியிருக்கிறார். இதனை பெனிக்ஸ், ஜெயராஜ் மரணம் தொடர்பாக வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற தந்தை மகனின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. பொதுமக்களில் தொடங்கி அரசியல், சினிமா, விளையாட்டு வீரர்கள், என அனைத்து தரப்பினரும் இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்து தங்கள் ஆறுதலையும், கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரம் தொடர்பாக ஏன் கருத்துக் கூறவில்லை என விமர்சனங்கள் ஒரு புறம் எழுந்தன.

தொலைபேசி மூலம்
இந்நிலையில் சத்தமின்றி ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு பேசி, தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை கராத்தே தியாகராஜன் நேற்று தனது ட்வீட்டர் பதிவு மூலம் ஊடகங்களுக்கு வெளியிட்டார். இதனிடையே ரஜினி உண்மையிலேயே ஜெயராஜ்,பெனிக்ஸ் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினாரா இல்லை அவர் பேசியதாக பொய்த் தகவல் பரப்பப்படுகிறதா என மீண்டும் விமர்சனங்கள் வட்டமடித்தன.

கமல், ரஜினி பேசினார்கள்
இதனிடையே இது தொடர்பாக அறிவதற்கு ஜெயராஜ் குடும்ப உறுப்பினர்களிடம் பேச முயற்சித்த நிலையில் வழக்கறிஞர் வேணுகோபால் நமக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, ''செல்வராணி அம்மாவிடம் (ஜெயராஜ் மனைவி- பெனிக்ஸ் தாயார்) ரஜினிகாந்த் பேசியது உண்மை. நேற்று மாலை பேசினார். அவருக்கு முன்பாக கமல் பேசினார். கமல் ஆறுதல் கூறிய சற்று நேரத்தில் ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனை நான் உறுதிப்படுத்தியதால் தான் உங்களிடம் தெரிவிக்கிறேன்'' என்றார்.

தேசிய அளவில்
இதனிடையே ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திமுக எம்.பி.கனிமொழி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் என பலரும் வந்து சென்ற நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கே.எஸ்.அழகிரியும் நேரில் ஆறுதல் கூற செல்லவுள்ளார். இதனிடையே இந்த விவகாரம், ராகுல், அமித்ஷா என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications