சாத்தான்குளத்தில் “சாத்தானா?”.. எங்கே சென்றது இந்த சாலை? வடிவேலு பாணியில் போஸ்டர் - பெரும் பரபரப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே "கிணத்தை காணவில்லை" என்ற வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் 1.5 கிலோமீட்டர் தார் சாலையை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்து இருக்கிறது துவர்குளம். இந்த ஊரின் எல்லையில் இருந்து மைய பகுதி வரை 1.5 கிலோ மீட்டர் தூரம் தார் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தார் சாலையை காணவில்லை எனவும், அதனை கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
ஆனால் இதை வழக்கமான முறையில் மனுவாக அளிக்காமல், ஊர்மக்கள் செய்திருக்கும் சம்பவம்தான் டிரெண்டாகி இருக்கிறது. நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் "ஐயா என் கிணத்தை காணோம்" என்று கூறி போலீசாக நடித்திருக்கும் நெல்லை சிவாவிடம் புகாரளிப்பார். என்ன செய்வதென்றே தெரியாமல் சிவா போலீஸ் வேலையை தூக்கி எரிந்துவிட்டு சீருடையை கழற்றிபோட்டு செல்வார்.
இதே பாணியை கையில் எடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள். வடிவேலுவின் அந்த நகைச்சுவை காட்சியின் படத்தை அச்சிட்டு "சாலையை காணவில்லை" என் எழுதி சாத்தான்குளம் சுற்றுவட்டார அரசு அலுவலக வாயில்களில் போஸ்டராக ஓட்டி இருக்கின்றனர். இதனால் சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "நோட்டீஸில் குறிப்பிட்டப்பட்ட சாலை ஆனது பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சாலை மோசமான நிலையில் உள்ளதால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வினோதமான முறையில் போஸ்டர் ஒட்டினோம்." என கூறுகின்றனர்.