அரோகரா.. முருகனுக்கு அரோகரா! திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சீமான் 2 அடியில் தங்க வேல் காணிக்கை!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடியில் தங்கத்தினாலான வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார் நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த 'வேல்' காணிக்கையை சீமான் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது மனைவி, மகன் என குடும்பத்தினருடன் சென்ற சீமான், கடற்கரையில் கால் நனைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோயில் வாசலில் ஆளுயர மாலையை சீமான் கையில் கொடுத்த அர்ச்சகர்கள் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பட்டு வேட்டி பட்டுச் சட்டை சகிதமாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த சீமானுக்கு, உண்டியல் அருகே திருஷ்டி சுற்றப்பட்டு தேங்காய் உடைக்கப்பட்டது.
இதையடுத்து முருகனுக்காக தாம் தயார் செய்து கொண்டு வந்திருந்த தங்க வேலை வழங்கி மனமுருக வழிபட்டார். அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

கோயிலில் மன நிறைவாக தரிசனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சீமான், அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு ஆளுக்கு ரூ.1,000 தட்சணை வழங்கவும் தவறவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் டொயோட்டா பார்ச்சூனர் புது கார் வாங்கிய சீமான், திருப்போரூர் முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்த பிறகு தான் அந்தக் காரை அவர் பயன்படுத்த தொடங்கினார். அந்தளவுக்கு சீமான் தீவிர முருகப்பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications