திடீரென தூத்துக்குடி வந்து சென்ற எஸ்பி வேலுமணி.. கோயில் தரிசனமா.. முக்கிய சந்திப்பா.. பின்னணி ?
தூத்துக்குடி : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து திடீரென தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேலுமணி வந்தார். அவர் எதற்காக வந்தார். கோயிலில் தரிசனம் செய்ய வந்தாரா அல்லது ஏதேனும் பூஜை நடத்த வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் கோயில் தரிசனம் மற்றும் பூஜை என்று சில தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் செவ்வாய்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் எந்த பெரிய ஆவணங்களும் சிக்கவில்லை. பணமும் கைப்பற்றப்படவில்லை.
சோதனையின் போது வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்துக்கொண்டு இரவு தான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து வெளியேறினர்.

என்ன காரணம்
அதன்பின்னர் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து புறப்பட்ட வேலுமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு உதவியாளருடன் புதன்கிழமை காலை வந்தார். பிஎம்டபிள்யூ சொகுசு காரில் அவர்கள் ஏறிச் சென்றார். ஆனால் அவர் எங்கு சென்றனர் என்று உளவுத்துறையும், போலீசும் விசாரித்தனர். ஆனால் எந்த உறுதியான தகவலும் தெரியவில்லை

கோயில் தரிசனம்
இதனிடையேஅதிமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆவின் சின்னத்துரையுடன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை 3.30 மணியளவில் மீண்டும் எஸ்பி வேலுமணி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தலைமையின் அனுமதியுடன் எல்லா பிரச்னைகளையும் சட்டரீதியாக சந்திப்பேன். செவ்வாய்கிழமை மதியமே கோயிலுக்கு வருவதாக இருந்தேன். ஆனால் விசாரணை நடந்ததால் வர முடியவில்லை. எனவே தான் இப்போது. எங்கள் கட்சி தலைவர்கள் அறிக்கைகள் கொடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அனுமதி பெற்று விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முழுமையாக விளக்கம் அளிப்பேன்" இவ்வாறு கூறிவிட்டு தூத்துக்குடியை விட்டு மீண்டும் புறப்பட்டு சென்றார்.

சத்ரு சம்ஹார யாகம்
இதனிடையே திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு வேலுமணி சென்றதாகவும் அங்கு ஏற்கனவே வந்திருந்த குடும்பத்தினருடன் பரிகார பூஜை மற்றும் சத்ரு சம்ஹார யாகம் ஆகியவற்றில் வேலுமணி கலந்து கொண்டு விட்டு, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றதாகவும் சில செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் குறிப்பிட்ட மடத்தினரோ, இங்கு அப்படி எந்த பூஜையும் நடக்கவில்லை, இங்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பூஜைகளே நடந்தது. அதற்கு பின்னர் எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்கள்.

வந்திருக்க முடியாது
இதனால் வேலுமணி தூத்துக்குடி மாவட்டத்திற்கு திடீரென வந்தது ஏன், எங்கு வந்தார், கோயிலுக்கு வந்தார் என்றால், எந்த கோயிலுக்கு வந்தார் என்ற கேள்விகள் எழுந்தது. ஏனெனில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பெரிய கோயில்களும் மூடப்பட்டன. திருச்செந்தூரிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அவர் வந்திருக்க முடியாது என்கிறார்கள்.

முக்கிய சந்திப்பு
ஆனால் அதேநேரம் எஸ்.பி.வேலுமணி, தூத்துக்குடியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கு சென்றதாக சில தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு ஏன் சென்றார், யாரை சந்தித்தார் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு மத்தியில் எஸ்பி வேலுமணி திடீரென தூத்துக்குடி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications